சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இளம்பெண்ணின் நகை பையை திருடியது தொடர்பாக, காவலரை ரயில்வே போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
சென்னை - சூளைமேடு பாட்ஷா தெருவைச் சேர்ந்த அருண்ராஜ் மனைவி ரேணுகா (30). இவர் தனது தாய், சித்தி, தங்கை ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி காவிரி விரைவு ரயில் முன்பதிவு பெட்டியில் நேற்று முன்தினம் அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தார். இவர், ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்த கைப்பையை கையில் சுற்றியபடி படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
இந்த ரயில் வாலாஜா ரயில் நிலையம் வந்தபோது, அங்கு ஒரு இளைஞர் ஏறினார். அந்த நபர், ரேணுகாவின் கைப்பையை பறித்து, தனது பையில் வைத்தார். அப்போது, சுதாரித்து கொண்டு எழுந்த ரேணுகா, கைப்பையை தருமாறு கேட்டபோது, அந்த நபர் தர மறுத்தார். உடனே, அந்த பையை எடுக்க முயன்றபோது, அந்த நபர் பையை வெளியே வீசி விட்டார். இதையடுத்து, அபாயசங்கிலியை பிடித்து ரேணுகா இழுத்து, ரயிலை நிறுத்தினர்.
தொடர்ந்து, திருமுல்லைவாயில் - அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே கிடந்த பையை எடுத்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர்.
இதற்கிடையில், அந்த நபரை ஆர்பிஎஃப் போலீஸார் பிடித்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில், வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அந்த நபர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (33) என்பதும், சென்னை - ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் என்பதும் தெரியவந்தது. புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.