புதுச்சேரி: சிறுமியை திருமணம் செய்தவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிறுமியின் தந்தை, அத்தை ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கயத்தார் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜானகிராமன் (31). இவர் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக உறவினர்களான தனலட்சுமி, லட்சுமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமியை ஜானகிராமன் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து சிறுமி தரப்பில் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் விசாரணையில் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. அதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் ஜானகிராமன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜானகிராமனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.
மேலும், ஜானகிராமனின் பெற்றோர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அத்தை ஆகிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் புதுவை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.
» திருச்சி விமான நிலையத்தில் கனடா நாட்டுப் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
» மதுரை மாநகராட்சி ‘தலைமை பொறியாளர்’ பொறுப்புக்கு காய் நகர்த்தும் முக்கிய அதிகாரிகள் - பின்னணி என்ன?