கும்பகோணத்தில் கூடா நட்பை கைவிட மறுத்த கணவர்: அம்மிக் குழவியை போட்டு கொன்ற மனைவி கைது

By KU BUREAU

தஞ்சை: கும்பகோணத்தில் கூடா நட்பை கைவிட மறுத்த கணவரை அம்மிக் குழவியை தலையில் போட்டு கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு 2010ம் ஆண்டு திருமணம் முடிந்து, 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வேலைக்காக கும்பகோணத்துக்கு வந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அன்பரசன் திருப்புவனம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்து மற்றொரு பெண்ணுடன் அன்பரசனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கூடா நட்பாக மாறியுள்ளது.

இதை அறிந்த கலைவாணி, தனது கணவரிடம் வேறு பெண்ணுடன் இருக்கும் நட்பை கைவிடமாறு தெரிவித்து வந்துள்ளார். இதனால், பேக்கரி வேலையை விட்டுவிட்டு, அன்பரசன் கடந்த 2 மாதங்களாக தச்சுத் தொழில் பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் அன்பரசன் அந்தப் பெண்ணுடனான கூடா நட்பை கைவிடாமல், அந்த பெண்ணுடந் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், அன்பரசன், கலைவாணி இடையே நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அன்று இரவும் அன்பரசனிடம் பெண்ணுடனான கூடாநட்பை கைவிடுமாறு கலைவாணி தெரிவித்துள்ளார். அப்போது இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு 10 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த அன்பரசனின் தலையில் கலைவாணி அம்மிக் குழவி கல்லை போட்டுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அன்பரசன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் அங்கு சென்று, அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து கலைவாணியை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE