திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் புகார் அளிக்க சென்ற வழக்கறிஞர் மீது, அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் திமுக கட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து மாலை தனது குழந்தையை அழைத்து வரச்சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடப்பது பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் இடையூறாக இருந்துள்ளது.
பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக்கோரி கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க வழக்கறிஞர் உதயகுமார் சென்றுள்ளார். இவரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார், இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறோம் என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கு வழக்கறிஞர் அமைச்சரை சந்தித்து புகார் செய்துவிட்டு தான் செல்வேன் என கூறி கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதை தடுத்ததில் பாதுகாப்பு போலீஸாருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸார் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சக வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவித்த உதயகுமார், பிற வழக்கறிஞர்கள் வந்தவுன் திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வழக்கறிஞர்கள் போராட்டத்தை துவக்குவதற்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.
» கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விதிமீறும் அரசியல் கட்சியினர் - நடப்பது என்ன?
» மீஞ்சூரில் காணாமல் போன இளைஞர் மழைநீர் வடிகாலில் சடலமாக மீட்பு
இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் ஆக ஆக வழக்கறிஞர்கள் அதிகம் பேர் வரத்துவங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதை கண்ட வழக்கறிஞர்கள் திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். ஏடிஸ்பி தெய்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வழக்கறிஞரை தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு எஸ்எஸ்ஐ, போலீஸார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறி இரவு 7.45 மணி வரை வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.