சென்னை: கீழ்பாக்கம் பகுதியில் ஸ்பா & சலூனில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று முன்தினம் (15.02.2025) மதியம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் செயல்பட்டு வந்த ஸ்பா மற்றும் சலூனில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக அயனாவரம் ஈஸ்வர்ராவ் மகன் விஜயகுமார் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் ரூ.6,200/- 2 செல்போன்கள் மற்றும் 2 ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 9 பெண்கள் மீட்கப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மேற்படி ஸ்பா மற்றும் சலூனின் உரிமையாளரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரி விஜயகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 9 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி - கிருஷ்ணகிரியில் 2 பேர் கைது
» சென்னை ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: அண்ணாமலை கண்டனம்