புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஹோட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் மகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அடுத்த திருபுவனையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). அப்பகுதி வணிகர் சங்க துணைத் தலைவர். இவர் திருபுவனை மேம்பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ஹோட்டல் மூடப்பட்டிந்த நிலையில், இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றனர். இதில் ஹோட்டல் முன்பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, திருவெண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த காந்தி என்ற திமுக பிரமுகரின் மகன் சபரிவாசன்(எ) சரவணப்பிரியன் (23), அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (19) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து நாட்டு வெடிகுண்டை ஹோட்டல் முன்பு வீசிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருபுவனை போலீஸார் நாட்டு வெடிகுண்டு வீசிய சபரிவாசன்(எ) சரவணப்பிரியன், பிரபாகரன் இருவரையும் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், செந்தில்குமார் மகன் ராகுல் (19) ஓசூரில் தொழில்நுட்ப கல்லூரியில் படிப்பதும், அவர் சபரிவாசனின் காதலுக்கு உறுதுணையாக இருந்து கல்யாணத்திற்கு உதவியதும் தெரியவந்தது. திருமணத்துக்குப் பிறகு சபரிவாசனும், ராகுலும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இதனால் சபரிவாசனை அவரது மனைவியின் தரப்பினர் திட்டியுள்ளனர். இதனால் ராகுல் மீது கோபமடைந்த சபரிவாசன் தனது நண்பருடன் சேர்ந்து ராகுல் குடும்பத்தினரின் உணவகத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியதாக தெரியவந்துள்ளது என்று போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். பின்னர் சபரிவாசன், பிரபாகரன் இருவரும் புதுச்சேரி நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.