சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

By KU BUREAU

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இளைஞர்கள் இருவரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மக்களின் போராட்டமும், இன்னொருபுறம் அரசியல் தலைவர்களின் கண்டங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து வெளியான தகவல்கள்: மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். அது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிப்போரை அடிப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதுமாக அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தப் பின்னணியில் வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் சாராயம் விற்பதை அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தட்டிக் கேட்டுள்ளார். இதனை முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25) மற்றும் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இவர்களிடம் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலைகள் குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடத் தொடங்கினர். இதனிடையே, அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், ராஜ்குமார் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார், மூவேந்தனை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலை சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து தமிழக அரசை அவர்கள் கடுமையாக விமரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE