திருப்பூர் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் ஒடிசா தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், ஒடிசா தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கரிய கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண், அப்பகுதியில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து அவரது வீட்டினர் ஊதியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நூல் மில் சுற்றுப்புற பகுதியில் தேடினார்கள். அப்போது அங்குள்ள பி.ஏ. பி.வாய்க்கால் அருகே புதருக்குள் அந்தப் பெண் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

இது குறித்து ஊதியூர் போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் அரிசி ஆலையில் தங்கி வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த உமேஷ் ரிஷிதேவ் (43) என்பவர் சம்பவத்தன்று வேலையை முடித்து, தனியாக நடந்து சென்றபோது அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்று தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உமேஷ் ரிஷிதேவை ஊதியூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்துக்கு உமேஷ் ரிஷிதேவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். இதையடுத்து உமேஷ் ரிஷிதேவ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE