மானாமதுரை அருகே மாணவரை வெட்டியவர் உட்பட 3 பேர் கைது

By இ.ஜெகநாதன்

மானாமதுரை அருகே ‘பட்டப்பெயர்’ சொல்லி அழைத்ததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை வெட்டியவர் உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூரைச் சேர்ந்த ராமன் மகன் அய்யாச்சாமி (20). இவர் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மேலப்பிடாவூர் சமுதாயக் கூடம் அருகே சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார் (21), ஆதீஸ்வரன் (22), வல்லரசு (21) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அய்யாச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது, வினோத்குமாரை ‘பட்டப்பெயர்’ சொல்லி அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதோடு தான் வைத்திருந்த வாளால் அய்யாச்சாமியின் இரு கைகளையும் வெட்டியுள்ளார். இதற்கு ஆதீஸ்வரன், வல்லரசு ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து அய்யாச்சாமி தாயார் செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE