சென்னை: மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஸ்பாவில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (10.02.2025) மாலை, மயிலாப்பூர், சிஐடி காலனி, பிஷப் வாலர்ஸ் அவென்யூ (தெற்கு) பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஸ்பாவை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பாவில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஸ்பா சென்டரின் உரிமையாளர் சென்னை எம்ஜிஆர் நகர் சுப்பிரமணி மகன் கணேஷ்குமார் (45) என்பவரை கைது செய்தனர். மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட எதிரி கணேஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (10.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.