சென்னை நகைப் பட்டறையில் திருட்டு: மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் கைது; 890 கிராம் தங்கம் பறிமுதல்

By KU BUREAU

சென்னை: யானை கவுனி பகுதியில் தங்க நகை பட்டறையில் தங்க நகைகள் திருடிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். 890 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பிராட்வே, வால் டாக்ஸ் ரோட்டில் அதோர் அலி (35) என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று அதிகாலை மேற்படி தங்க நகை பட்டறையில் இருந்து சுமார் 1,066 கிராம் எடையுள்ள தங்க நகைகளை, மேற்படி நகை பட்டறையில் தங்க நகைகள் பாலிஸ் போடும் வேலை செய்து வந்த மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சபுல் பியாடா என்பவர் திருடிக் கொண்டு தப்பிச் சென்றதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்க நகைகளை மீட்டு தரும்படி மேற்படி கடையின் உரிமையாளர் அதோர் அலி என்பவர் C-2 யானை கவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

C-2 யானை கவுனி காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் அலிம் கெயின் (23) மற்றும் நூர் ஹசன் முல்லா (23) ஆகிய இருவரை திருச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் சைபுல் பியாடா மேற்படி கடையில் தங்க நகைகளை திருடி அவரது நண்பர்களான மேற்படி நபர்களிடம் கொடுத்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 890 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சபுல் பியாடா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் நேற்று (04.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE