தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர் ரயிலில் இருந்து துள்ளி குதித்ததில் படுகாயம்

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர் ரயிலிலிருந்து துள்ளி குதித்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட மலைக்கோட்டை விரைவு ரயிலில் பயணித்த நாமக்கல் அருகே சேந்தமங்கம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (23) என்பவர் விழுப்புரம் வரை பயணம் செய்ய டிக்கெட் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.20க்கு விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் சற்று குறைவான வேகத்தில் சென்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நிதிஷ்குமார் விக்கிரவாண்டி ரயில் நிலைய பிளாட்பார்மில் துள்ளி குதித்ததில் படுகாயமடைந்தார். இதனை அறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸார் அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE