டெல்லியில் அதிர்ச்சி: ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை

By KU BUREAU

டெல்லி: ஜேஇஇ தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த 17 வயது மாணவி, அத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

டெல்லி ஜாமியா நகர் ஓக்லா பிரதான சந்தையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து நேற்று இரவு 11:25 மணிக்கு 17 வயது மாணவி குதித்துள்ளார். இதுகுறித்து ஜாமியா நகர் காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது தற்கொலை செய்துகொண்ட அவர் 12ம் வகுப்பை முடித்துவிட்டு ஜேஇஇ தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தவர் என்பது தெரியவந்தது. படிப்பு அழுத்தம், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது, தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாணவி தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாததால், தன்னை மன்னிக்கும்படி பெற்றோரிடம் தனது தற்கொலை குறிப்பில் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE