திருவேற்காடு அருகே விஷம் வைத்து 2 நாய்கள் கொலை: புகைப்பட கலைஞர் கைது

By இரா.நாகராஜன்

ஆவடி: திருவேற்காடு அருகே விஷம் வைத்து 2 நாய்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகைப்பட கலைஞர் ஒருவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே உள்ள பெருமாளகரம், புளூட்டோ தெருவைச் சேர்ந்தவர் மோகன் (53). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர், தன் வீட்டு அருகே தெரு நாய்களுக்கு நாள் தோறும் உணவுகளை அளித்து பராமரித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான பாலாஜி (42), தன் வீட்டில் பொமேரியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி பாலாஜியின் வீட்டினுள் இருந்த வெளியே வந்த, பொமேரியன் வகை நாயை, மோகன் பராமரித்து வந்த தெரு நாய்களில் சில கடித்து குதறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பொமேரியன் நாய் உயிரிழந்தது. இதனால், ஆத்திரமடைந்த பாலாஜி உணவில் விஷத்தை கலந்து இரு தெரு நாய்களை கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மோகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் விரைந்த திருவேற்காடு போலீஸார், 2 தெரு நாய்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சென்னை -வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து. வழக்குப் பதிவு செய்த போலீஸார் பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல்நிலைய பிணையில் போலீஸார் விடுவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE