ரூ.32 லட்சம் மதிப்பிலான மெத்தாபெட்டமைன் பறிமுதல் - ராமநாதபுரத்தில் இருவர் கைது

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் மெத்தாபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் பகுதிகளில் போதைப்பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம், சார்பு ஆய்வாளர்கள் தினேஷ், தங்க ஈஸ்வரன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் கொண்ட தனிப்படையை அமைத்தார். இத்தனிப்படையினர் 2 மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை (அக்.24) பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச்சாலை குப்பைக் கிடங்கு பகுதியில் மறைந்திருந்து போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் எடை கொண்ட மெத்தாபெட்டமைன் என்ற போதைப்பொருள் பாக்கெட்டுகளை கைப்பற்றினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகம்மது ஹாரீஸ் (29), ராமநாதபுரம் நேருநகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் (30) என்பது தெரிய வந்தது. இவர்கள் இந்த போதைப்பொருளை ராமநாதபுரம் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், அதை முகம்மது ஹாரீஸ் சென்னையில் இருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4 அதிக விலை மதிப்புள்ள செல்போன்கள், பாஸ்போர்ட், ரூ.45 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விலை உயர்ந்த போதைப்பொருளான மெத்தாபெட்டமைன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்டுள்ள 300 கிராம் மெத்தாபெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு ரூ.32 லட்சம். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.50 கோடிக்கு மேல் இருக்கும்.

சர்வதேச அளவில் இந்த போதைப்பொருள் கடத்தப்படுவது வழக்கம். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இந்த போதைப்பொருள் விற்கப்படுவது முதன் முறையாக தெரிய வந்துள்ளது. அதனால் இளைஞர்கள், மாணவர்கள் இதுபோன்ற போதைப்பொருளை பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற போதைப்பொருள் வைத்திருந்தால் கைது செய்யப்படுவர், அவர்களது வாழ்க்கை சீரழிந்து விடும். முகம்மது ஹாரீஸ் தலைமையின் கீழ் சிலர் சில்லரை விற்பனையாளர்களாக இருந்து இதுபோன்ற போதைப்பொருளை விற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். கைது செய்யப்பட்ட இருவரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE