பல்லாவரம் ரோந்து வாகனத்தில் அமர்ந்தபடி புகைப்பிடித்த காவல் ஆய்வாளர் - வைரல்

By பெ.ஜேம்ஸ் குமார்

பல்லாவரம்: பல்லாவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தனது காவல் வாகனத்திலேயே அமர்ந்து புகை பிடிக்கும் வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லாவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக சிவராம ஜெயம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் குரோம்பேட்டையில் உள்ள பாண்ட்ஸ் மேம்பாலத்தின் மேல் போக்குவரத்து ரோந்து வாகனத்தில் அமர்ந்தபடி புகை பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் போக்குவரத்து ஆய்வாளர் சிவராம ஜெயம் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடாமல், சக போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபட வைத்துவிட்டு இவர் மட்டும் ரோந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு, செல்போனை பார்த்தபடியே கையில் சிகரெட்டை வைத்து புகை பிடித்துக் கொண்டு இருந்தது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், பொது இடத்தில் யார் இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் மீது காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE