சென்னை | முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த ரவுடி கைது

By KU BUREAU

சென்னை: அயனாவரத்தில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்ப்பேட்டை, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (70). இவர் கடந்த 16-ம் தேதி இரவு அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்குவந்த நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததால் அந்த நபர் பெருமாள்சாமியை தாக்கிவிட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டுத் தப்பினார்.

இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் பெருமாள்சாமி புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுசெய்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது சென்னை கீழ்ப்பாக்கம், லாக்மா நகரைச் சேர்ந்த வசந்த் என்ற பப்லு (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட வசந்த் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஒரு கொலைவழக்கு உட்பட 7 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE