பார்வர்ட் பிளாக் பொதுச்செயலருக்கு கொலை மிரட்டல் - முன்னாள் நிர்வாகி மீது புகார்

By என்.சன்னாசி

மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சிவபாண்டியன் இன்று மதுரை காவல் ஆணையர் லோக நாதனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘எங்களது கட்சியில் இருந்து சில மாதத்திற்கு முன் நீக்கப்பட்ட திருப்பூர் கர்ணன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளரான கார்த்திக் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, கதிரவன் தலைமையில் நீ எப்படி செயல்படலாம் எனக் கூறி அவரையும், கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரும் மாநில பொதுச்செயலாளருமான கதிரவனையும் தகாத வார்த்தையால் திட்டி வெட்டிக் கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

திருப்பூர் கர்ணனால் எங்களது கட்சி பொதுச்செயலாளரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து உள்ளது. ஆகவே, கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கதிரவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE