பேரூர் ஆதினம் மீது உதகை ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கம் மோசடி புகார்

By KU BUREAU

உதகை: உதகையில் உள்ள தட்சணாமூர்த்தி மடத்தின் ஆதினமாக உள்ள பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மீது ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கத்தினர் காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் தட்சணாமூர்த்தி மடம் உள்ளது. இந்த மடத்தின் ஆதினமாக உள்ள பேரூர் ஆதினம் மருதாசல அடிகர் மீது ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கத்தினர் காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளனர். சங்கத்தின் தலைவர் ரங்கசாமி, செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் டி.ரவிசங்கர் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கம் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சங்கமாகும்.

கோவிலில் நடக்கும் பூஜையை ஊக்குவிப்பதும், மகா சிவராத்திரி, குரு பூஜை விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி, கும்பாபிஷேகம், சங்கு அபிசேகம், பைரவ பூஜை, பிரதோஷம் போன்றவற்றைக் கொண்டாடுவதும், அன்னதானம் ஏற்பாடு செய்வதும் சங்கத்தின் நோக்கமாகும். அறங்காவலர்களுடன் இணைந்து செயல்படவும், அவர்களுக்கு பூஜைகள் செய்யவும், கோவிலை மேம்படுத்தவும், சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும், உறுப்பினர் சந்தா / பங்களிப்பு மற்றும் பிற வழிகளில் நிதி திரட்டப்படுகிறது.

உதகை ஃபிங்கர் போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு பராமரித்து வந்தோம். இந்தக் கணக்கு 1998ம் ஆண்டு தொடங்கி 25 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்குகள் தலைவர், செயலாளர், பொருளாளர் அல்லது இருவரால் மட்டுமே இயக்கப்படுகிறது. எங்கள் கணக்கில் ரூ. 18,73,793.45 இருப்பில் இருந்தது. பேரூர் ஆதினத்தின் மடாதிபதியாக இருக்கும் மருதாசல அடிகளார், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மடாதிபதி என்று கூறிக்கொண்டு, வங்கி மேலாளருடன் சேர்ந்து சதி செய்து எங்கள் மடத்திலிருந்து முழுத் தொகையையும் சட்ட விரோதமாக திரும்பப் பெற்றுள்ளார்.

சங்க கணக்கின் தவறான அறிவுரைகள் நமக்குத் தெரியாமல் மோசடி, ஏமாற்றுதல் மற்றும் குற்றச் சதிச் செயலைச் செய்தன. இந்து அறநிலைத்துறை கோவை இணை ஆணையரின் தவறான ஆலோசனையின்படி, மருதாசல அடிகளார் வங்கி மேலாளருடன் சேர்ந்து செய்த சட்டவிரோதச் செயல், பாரதிய நியாய சன்ஹிதா 2023 இன் பிரிவு 61 (1 & 2) மற்றும் பிரிவு 318 இன் கீழ் தண்டனைக்குரியது.

எனவே, மேற்படி சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைக்காக இந்த புகாரை பதிவு செய்கிறோம். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் இந்து அறநிலைத்துறை கோவை இணை ஆணையர் மற்றும் வங்கி மேலாளர் மற்றும் கிரிமினல் சதித்திட்டத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

பேரூர் ஆதீனம் விளக்கம்: இதுகுறித்து பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறும்போது, ‘‘ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கத்தினர் பக்தர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். அந்த பணத்தை தட்சணாமூர்த்தி மடத்தின் வங்கிக் கணக்கில் அவர்கள் சேர்க்கவில்லை. மாறாக, இரு வங்கிக் கணக்குகளை தனிப்பட்ட முறையில் தொடங்கி அதில் போட்டு வைத்துள்ளனர். 2016-ல் இவ்விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர், உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், இந்துசமய அறநிலையத்துறையின் ஆணையர் நீதிமன்றம் விசாரித்தது.

தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை, மடத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்ற ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இணை ஆணையர் கடிதம் வழங்கி வங்கிக்கு அனுப்பினார். அதனடிப்படையில்,தனிப்பட்ட ஒரு வங்கிக்கணக்கில் இருந்த ரூ.18.73 லட்சம் தொகையை மடத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வங்கிக்கணக்கில் ரூ.50 லட்சம் வரை வசூலித்து வைத்துள்ளனர். அந்த வங்கிக்கணக்கின் விவரம் தெரியவில்லை. அதைக் கண்டறிந்து அதிலுள்ள தொகையும் மடத்தின் பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE