தேனியில் பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பேருந்து தீப்பற்றி முற்றிலும் சேதம். இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழப்பு.

தேனி மாவட்டம் வீரபாண்டி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மதுரையிலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, போடேந்திரபுரம் நான்கு வழி சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்து போது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்தும் டூவீலரும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிருக்கு பயந்து அவசர அவசரமாக வெளியேறினர்.

இருசக்கர வாகனத்தில் வந்த கூழையனூர் அய்யனார் புரத்தை சேர்ந்த அரசாங்கம் (54) என்பவர் பேருந்தின் அடியில் பலத்த காயங்களுடன் சிக்கிக்கொண்டார். அதனால் வெளியேற முடியாமல் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தேனி, போடி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE