பரவை காய்கறி மார்க்கெட் லோடுமேன் கொடூரக் கொலை - மதுரையில் பயங்கரம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் பரவை காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்த லோடுமேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (எ) குட்டை அஜித் (30). இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக இருந்தார். இவருக்கும், அங்கு பணிபுரிந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை செல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் வைத்து அஜித்திற்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, எதிர் தரப்பினர் கல்லால் அவரை தாக்கியும், தலையில் கல்லை தூக்கிப்போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த செல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அஜித் கொல்லப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE