முதுகுளத்தூர் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு; இருவர் படுகாயம்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சாலமோன் (65), பஞ்சவர்ணம் (60), கபிலன் (57) ஆகிய மூவரும் விவசாய நிலத்தில் கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர். மூன்று பேரும் சேர்ந்து இன்று (அக்.5) மதியம் அருகே உள்ள வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் சாலமோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பஞ்சவர்ணம், கபிலன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உயிரிழந்த சாலமோன் உடல், உடற்கூறு ஆய்விற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இளஞ்செம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE