இந்திய பெண்ணை மணந்த இலங்கை நபரை நாடு கடத்த தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: இந்திய பெண்ணை மணந்த இலங்கை நபருக்கு விசா கால நீட்டிப்பு வழங்கவும், அதுவரை அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சரவண பவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் இலங்கையைச் சேர்ந்தவன். கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தேன். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவசக்தியை திருமணம் செய்ய முடிவு செய்தேன். நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதாலும், இந்திய ஆதார் கார்டு இல்லாததாலும் எனது திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய முடியவில்லை. இருப்பினும் சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.

இந்நிலையில் எனது 3 மாத விசா காலம் முடிவடைந்ததால் விசா கால நீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து எனது விசா காலத்தை நீ்ட்டிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "இந்திய குடியுரிமை பெற்றவரை வெளிநாட்டு நபர் திருமணம் செய்தால் அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டு கால விசா நீட்டிப்பு வழங்கலாம் என நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மனுதாரருக்கு விசா நீட்டிப்பு வழங்கலாம்” எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி, “வெளிநாட்டு குடியுரிமை பெற்றவருக்கான விசா நீட்டிப்பு தொடர்பாக ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இலங்கையைச் சேர்ந்த மனுதாரருக்கு இந்தியாவில் முறையாக திருமணம் நடைபெற்றதா என்பதை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து விசா நீட்டிப்பு வழங்க வேண்டும். அதுவரை மனுதாரரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE