நீடாமங்கலம் அருகே பெண் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்தவர் கைது

By KU BUREAU

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் சோனாபேட்டையைச் சேர்ந்தவர் விவசாயி சிவாஜி. இவரது மனைவி இந்துமதி(40). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வட்டித் தொழில் செய்து வரும் காந்தி (48) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிவாஜியின் வீட்டுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற காந்தி, அங்கு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த சிவாஜியின் கார் மீது டிராக்டரை மோதினார். இதை தட்டிக்கேட்ட சிவாஜியின் மனைவி இந்துமதி மீதும் டிராக்டரை மோதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதில், இந்துமதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக, திருவாரூர் எஸ்.பி. மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய காந்தியை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், பட்டுக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த காந்தியை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE