கொலைவழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் இரண்டே நாளில் கொலை செய்த கொடூரம்!

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொலை வழக்கில் கைதான இளைஞர் ஜாமீனில் வெளி வந்த நிலையில், இரண்டே நாளில் மீண்டும் இன்னொரு கொலைச் செய்ததால் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞர். இவர் சிறுவனாக இருந்த போது கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ள அந்த இளைஞர், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகமுத்து என்பவரிடம் தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகமுத்துவை கழுத்தில் வெட்டியும், முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீயிட்டும் இளைஞர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அலங்காநல்லூர் போலீஸார் ஜாமீனில் வெளி வந்த இளைஞரை மீண்டும் கைது செய்தனர்.

கொலை வழக்கில் சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளி வந்த இளைஞர், இரண்டே நாளில் மீண்டும் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE