திருப்பூர்: பனியன் நிறுவனம் ஒப்பந்ததாரர் கத்தியால் குத்தி கொலை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா (35). பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் இவர், பனியன் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் வேலை செய்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் வசந்த் (19). வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் வேலையில், அழகுராஜாவுக்கும் வசந்துக்கும் பழக்கம் ஏற்பட்டதில் இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு இருவரும் முருகம்பாளையம் பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த வசந்த், தான் வைத்திருந்த கத்தியால் அழகு ராஜாவை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து வசந்தை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE