61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!

By காமதேனு

சென்னை முகலிவாக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 2014 ம் ஆண்டு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், 2014ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடம், 2014 நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போது திமுக பொருளாளராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரு நபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதன் பரிந்துரை அடிப்படையில், காப்பீட்டை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக, கடந்த 2017ம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE