சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பட்டுக்கோட்டையில் 2 இளைஞர்கள் கைது

By KU BUREAU

தஞ்சாவூா்: தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் பகுதியில் 17 வயது சிறுமி சாலையில் அழுது கொண்டு நின்றுள்ளார். அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு அதிராம்பட்டினம் போலீஸில் ஒப்படைத்தனர். அவர்கள், அச்சிறுமியை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: திருவாரூர் மாவட்டம் சாத்தனூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன்(28). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் இவரும், இவரது நண்பர் தவசீலன் (27) ஆகிய 2 பேரும் மன்னார்குடியில் இருந்து சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து, ராஜாமடம் அக்னி ஆறு பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கேயே சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அச்சிறுமி சேர்க்கப்பட்டுள்ளார் என்றனர்.

தொடர்ந்து, இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் முத்துப்பாண்டியன், தவசீலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE