திமுக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது - தப்பிக்க முயன்றவர்களுக்கு கை, கால் முறிவு

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 2 பேர் போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் குன்னம் பட்டியைச் சேர்ந்த திமுக ஒன்றிய பொருளாளர் மாசி பெரியண்ணா (40). இவரது மனைவி முத்துமாரி, நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். மாசி பெரியண்ணா செப்.26-ம் தேதி இரவு வேடசந்தூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உறவினர் கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கொலை வழக்கில் திண்டுக்கல் அருகே யுள்ள குறுக்கலையாம் பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் (23), பெருமாள் கவுண்டன்பட்டி மதுமோகன் (23) ஆகியோர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களை நேற்று வேடசந்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, போலீஸாரிடம் இருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் சரவணகுமாருக்கு காலிலும், மதுமோகனுக்கு கையிலும் முறிவு ஏற்பட்டது. இருவரையும் போலீஸார் திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE