சென்னை | சிறுமி பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

By KU BUREAU

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தன் தாயாருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயாருடன் திருவல்லிக்கேணியை சேர்ந்த 38 வயதான இளைஞர் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். சிறுமிக்கு வளர்ப்பு தந்தையாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவ.1-ம் தேதிசிறுமியை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்அளித்த புகாரின்பேரில் ராயப் பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறி அந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதி்த்து தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவி்ட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE