கடன் பிரச்சனையால் தாய், தந்தை, மகன் தற்கொலை - பெரம்பலூர் அருகே சோகம்

By அ.சாதிக் பாட்சா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகே உள்ள என்.புதூர் கிராமம், மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜு மகன் சின்னதுரை (58). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு கலா (50) எனும் மனைவியும், பிரியா (34), நித்யா (32) என 2 மகள்கள், சிவா (30) எனும் மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

சிவாவுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக சிவாவின் மனைவி அனிதா பெரம்பலூர் மாவட்டம், பரவாய் கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் உள்ளார்.

சிவா பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் தீபாவளி சீட்டு வசூலித்து வந்துள்ளார். வசூலித்த பணத்தைக் கொண்டு தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியுள்ளார். இந்த வகையில் அவருக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் கடன் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டபோது சிவா பணத்தைக் கொடுக்க முடியவில்லை. பலரும் பணத்தைக் கேட்டு நெருக்குதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் சின்னதுரை, அவரது மனைவி கலா, மகன் சிவா ஆகிய 3 பேரும் வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு என்.புதூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் பின்புறம் உள்ள ஓடையில் இறந்துக் கிடந்தனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூர் போலீஸார் 3 பேரின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE