திருப்பத்தூர் அருகே பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருமுக்காணிப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் ரமேஷ் (33). அவர் தனது உறவினரான சேதுராஜ் மனைவி லட்சுமியிடம் (36) பணம் கொடுத்து வைத்திருந்தார். அந்த பணத்தை லட்சுமியிடம் கேட்டார். அவர் தர மறுக்கவே, கடந்த 2012 அக்.29-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் லட்சுமியை தாக்கி, மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.

பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீழசிவல்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றவாளி ரமேஷூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE