வேப்பனப்பள்ளி அருகே தம்பியை கொன்ற அண்ணன் கைது

By KU BUREAU

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே உடுங்கல் போடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (45). இவரது தம்பி வெங்கடேஷ் (40). கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவருக்கும் இடையில் நிலப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், மாதேஷ் வீட்டுக்கு நேற்று சென்ற வெங்கடேஷ் அங்கிருந்த அவரது அண்ணி ரீனாவிடம் (40) தவறாக நடக்க முயன்றுள்ளார். ரீனா கூச்சல் எழுப்பவே அங்கிருந்து வெங்கடேஷ் தப்பினார்.

இதுதொடர்பாக வெங்கடேஷை, மாதேஷ் கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மாதேஷ், அரிவாளால் வெங்கடேஷை வெட்டியதில், நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.

இதையடுத்து, குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் மாதேஷ் சரணடைந்தார். கொலை நடந்த பகுதி சூளகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் சூளகிரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த சூளகிரி போலீஸார், மாதேஷை கைது செய்ததோடு, சம்பவ இடத்தில் வெங்கடேஷின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE