மதுரையில் இரண்டு நபர்களுக்கு  'ஸ்கெட்ச் போட்டு' ஆயுதங்களுடன் சுற்றிய 7 இளைஞர்கள் கைது! 

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் முன்பகை காரணமாக, இரண்டு நபர்களை கொலை செய்ய திட்ட மிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 7 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் காவல்துறையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வாளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த குமார் (எ) பைப் குமார் என தெரிந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக வைக்கம் பெரியார் நகரிலுள்ள மச்ச சிவா, தனது கூட்டாளிகளான ரஞ்சித், முத்துப்பாண்டி ஆகியோர் மூலம் குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அவரை முந்திக்கொண்டு மச்ச சிவாவின் கூட்டாளிகளை கொலை செய்யும் திட்டத்துடன் குமார் அங்கு நின்றது தெரிந்தது.

இந்த 'சம்பவத்தை' நிகழ்த்த குமாருக்கு உடந்தையாக அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த பாலமுருகன் (24), அருண்குமார் (24), ஆரோக்கிய விஜய் (20), ஆகாஷ் (19), அசோக்குமார் (23), முகம்மது அசன் (24) ஆகியோர் இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பைப் குமார் உள்ளிட்ட 7 பேரையும் அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பட்டாகத்திகள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE