வண்டலூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சிக்கிய இளைஞருக்கு தர்ம அடி; 2 பேருக்கு வலை

By பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: வண்டலூர் அருகே மாம்பாக்கத்தில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீஸார் தேடி வருகினறனர்.

வண்டலூர் அருகே மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருகிறார் 14 வயதான சிறுமி. 9ம் வகுப்பு மாணவியான அவர், நேற்று மாலை 7 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டின் அருகிலுள்ள புதர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். இதில் திடீரென ஒருவன் அப்பெண்ணின் பின்பக்கம் சென்று வாயில் துணியை வைத்து அழுத்திக்கொள்ள, மற்ற இருவரும் அச்சிறுமியை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வெளியே ஓடி வந்த சிறுமி, கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து சமத்துவபுரம் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியிடம் விசாரித்ததில், நடந்ததை அச்சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உருட்டுக் கட்டையுடன் மூவரையும் தேடியுள்ளனர். இதில் ஒரு நபரை மட்டும் பிடித்த அவர்கள், சரமாரியாக அவரை அடித்து உதைத்துள்ளனர்.

அப்போது, அந்த நபர் செல்போன் திருட வந்ததாக உளறியுள்ளார். இதையடுத்து தாழம்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த பொது மக்கள், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

ஆய்வாளர் கீதா வழக்குப் பதிவு செய்து பொதுமக்கள் பிடித்துக்கொடுத்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாம்பாக்கம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE