ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ஆரணி அருகே ஏரியில் குளித்த 2 குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், 3 சிறுமிகள் என 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமம் அண்ணா நகரில் வசிப்பவர்கள் குப்பன் - அஞ்சலி தம்பதியின் மகன் மோகன் (12), வர்ஷா (8) மற்றும் விநாயகம் - செல்வி தம்பதியின் மகள்கள் கார்த்திகா (10), தன்ஷிகா (5). இவர்கள் நான்கு பேரும், அதே கிராமத்தில் உள்ள ஓடைதாங்கல் ஏரியில் இன்று (செப்.17) மாலை குளித்துள்ளனர். நீண்ட நேரமாகியும், ஏரியில் இருந்து வெளியே வரவில்லை.

இந்நிலையில், ஏரிக்கரையில் இருந்த அவர்களது துணிகளை பார்த்த கிராம மக்கள், ஏரியில் இறங்கி 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, உயிரிழந்த நிலையில் ஒரு சிறுவன் மற்றும் 3 சிறுமிகளின் உடல்களை வெளியே கொண்டு வந்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

சிறுவர், சிறுமிகளின் உடல்களை காவல்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரே கிராமத்தில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளது, அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE