திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கர்லாக் கட்டையால் அடித்துக் கொலை - அண்ணனிடம் விசாரணை

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கர்லாக் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது அண்ணனிடம் கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி - கீழ தேவதானத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் பிருத்திவிராஜ் (48). இவர் தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் பிருத்திவிராஜ் நேற்று மதியம் அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் கர்லாக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற கோட்டை இன்ஸ்பெக்டர் எம்.பெரியசாமி உள்ளிட்ட போலீஸார், பிருத்திவிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பிருத்திவிராஜ், அவரது அண்ணன் ரமேஷ் (50) மற்றும் இவரது நண்பர் சவுந்தர் ஆகிய 3 பேரும் பிருத்திவிராஜ் வீட்டு மாடியில் நேற்று காலை முதல் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்குள் போதையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் மதியம் 1 மணிக்கு மேல் பிருத்திவிராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது.

மேலும், திருமணமாகாத பிருத்திவிராஜ், அண்ணன் ரமேஷ் மனைவியுடன் கூடா நட்பில் இருந்ததாகவும், சொத்துத் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்ணன் ரமேஷை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவரும் மது போதையில் இருப்பதால் உண்மை நிலவரம் தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE