திருச்சி அருகே ரவுடி கொடூரக் கொலை - நடந்தது என்ன?

By KU BUREAU

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கழுத்து வெட்டி காக்கா சுந்தர் (என்ற) சீ.சுந்தர்ராஜன்(33). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் நேற்று காலை சுந்தர்ராஜன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சித்தப்பா மற்றும் குடும்பத்தினர், இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையிலான போலீஸார் கொலை நடந்த இடத்துக்கு வந்து, சுந்தர்ராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருச்சி எஸ்.பி. வீ.வருண்குமார் கொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர் கலைவாணி தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர்.

துப்புத் துலக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் லீலீ கொலை நடந்த வீட்டிலிருந்து சிறிது தொலைவு சென்று நின்று விட்டது. இந்த கொலை குறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுந்தர்ராஜ், அதே பகுதியைச் சேர்ந்த சகோரர்களான மூ.மதி, மூ.வடிவேல் ஆகியோருடன் பெயின்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்துள்ளது. அதனால் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், சுந்தர்ராஜ் ஓட்டி வந்த சரக்கு வேன் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE