நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - ‘போக்சோ’வில் 2 ஆசிரியர்கள் கைது

By KU BUREAU

திருநெல்வேலி: பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டையில் பிரபலமான இப்பள்ளியில் ஆசிரியர் ராபர்ட் (48), தற்காலிக ஆசிரியர் நெல்சன் (55) ஆகியோர், 7-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, பெற்றோர்களிடம் மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து, பள்ளி நிர்வாகத்திடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதியானது. 2 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மாணவர்கள் தரப்பில் அளிக்கப் பட்ட புகாரை அடுத்து, போலீ ஸார் விசாரணை நடத்தி ராபர்ட், நெல்சன் ஆகிய 2 ஆசிரியர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE