இளம்பெண்ணைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசி சென்ற கொடூரம் @ தேனி

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தில் பெண்ணை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரிக்குண்டு கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் க.விலக்கு போலீஸார் மற்றும் ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மீட்டனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணைக் கொலை செய்து உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.

தடயங்களை சேகரித்ததில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் இழுத்துச் செல்லப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என போலீஸார் உறுதிப்படுத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் அப்பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என தெரிய வந்துள்ளது.

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொலையான அப்பெண் தொடர்பான புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி, காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE