நெடுஞ்சாலையில் தலையின்றி நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்: துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்

By KU BUREAU

உத்தரபிரதேசம்: கான்பூரின் குஜைனி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை தலையில்லாத பெண்ணின் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று நெடுஞ்சாலையில் வீசப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. சடலம் கைப்பற்றப்பட்டு 24 மணி நேரங்களுக்குப் பிறகும், போலீஸார் கொல்லப்பட்டவர் குறித்து துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

குஜைனி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 6.15 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. ஆனால் சுமார் 3 கிமீ தொலைவில் ஒரு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள பெண் அணிந்திருக்கும் ஆடைகள் மற்றும் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் துணி துண்டுகள் மற்றும் செருப்புகளுடன் ஒத்துப்போகின்றன என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இறப்புக்கான காரணத்தை உறுதி செய்வதற்காக உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பெண் ஒருவரைக் காணவில்லை என்ற புகார் எதுவும் அந்த மாவட்டத்தில் பதிவாகவில்லை. எனவே சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட பெண்ணின் படத்தை காண்பித்து, அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் அந்தப் பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பற்கள் மற்றும் எலும்புகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர் உள்ளூர்வாசியா அல்லது வெளியூரை சேர்ந்தவரா என்பதை உறுதிப்படுத்த போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘பெண்களுக்கு எதிரான மற்றொரு அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவத்தில், கான்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பெண்ணின் தலையில்லாத, நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் நியாயமான முறையில் விசாரிக்கப்படவேண்டும். குற்றவாளிகளுக்கு பயம் ஏற்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். பாஜக தலைமையிலான மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என்று நம்புகிறேன்’ என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE