திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை, திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று (செப். 10) கைது செய்தனர்.

மதுரையை சேர்ந்தவர் முத்தையன். திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் தங்கி, பெருமாநல்லூர் சாலையில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்தார். இதனை உண்மையென நம்பிய பொதுமக்கள் பலர், இவருடைய நிதி நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணத்தை முதலீடு செய்தனர். இவர்களுக்கு அறிவித்தபடி வட்டியுடன் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். துணை காவல் கண்காணிப்பாளர் முருகானந்தம் மேற்பார்வையில் போலீஸார் விசாரணை நடத்தினார். இதில் 120-க்கும் மேற்பட்டவர்களிடம், அதிக வட்டி கொடுப்பதாக கூறி ரூ.20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முத்தையன், அவருடைய மனைவி மஞ்சு, மகன் கிரண்குமார் உள்பட 7 பேர் மீது, கடந்த மாதம் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முத்தையன்(48), மனைவி மஞ்சு (47), மகன் கிரன்குமார் (22) ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் எட்டரை பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். எஞ்சிய 4 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE