கைதியை 95 நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை - வேலூர் சிறையில் சிபிசிஐடி விசாரணை

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டில் இருந்து ரூ.4.25 லட்சம் பணம் திருடப்பட்டது தொடர்பாக சிறை கைதியை 95 நாட்கள் தனி சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக வேலூர் சரக டிஐஜி, மத்திய சிறை (பொறுப்பு) கண்காணிப்பாளர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பான முதற்கட்ட விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டில் பணியாளாராக வேலை செய்து வந்துள்ளார். அவர், டிஐஜி வீட்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.4.25 லட்சம் பணத்தை திருடியதாக புகார் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை தனி சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப் பட்டது. இதுகுறித்து, வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியார் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் சிபிசிஐடி காவல் துறையினர் பி.என்.எஸ் 115(2), 118(2), 146, 49, 127(8) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, மத்திய சிறை (பொறுப்பு) கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் தனி பாதுகாவலர் ராஜூ, சிறப்புபடை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டனை கைதி சிவக்குமார் உள்ளிட்ட சிலர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி முதல் தொரப்பாடியில் உள்ள சிறைச்சாலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் பணி, காற்று நிரப்பும் பணி, செடிகள் பராமரிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

1983-ம் ஆண்டு சிறைச்சாலை விதிகள் 447-ன் படி சிறைவாசிகள் சிறைக்கு வெளியே பணியமர்த்த சிறைத் துறை தலைவரின் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், சிவக்குமார் உள்ளிட்டோர் வெளியில் பணியில் அமர்த்தியதற்கான உத்தரவுகள் எதுவும் இல்லை. மேலும், சிறைச்சாலை விதிகளை மீறி டிஐஜி வீட்டில் சிவக்குமார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

சிறைத்துறை டிஐஜி வீட்டில் இருந்து ரூ.4.25 லட்சம் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் எதுவும் நீதிபதியின் விசாரணையில் கிடைக்காத நிலையில் டிஐஜி வீட்டில் பணம் ஏதும் திருடு போனதா? என பாகாயம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரடியாக விசாரித்துள்ளார். அப்போது, பணம் திருடுபோனதாக புகார் எதுவும் வரவில்லை என்பதை நீதிபதி கண்டறிந்துள்ளார்.

மேலும், தண்டனை கைதி சிவக்குமார், எச்.எஸ்-4 தொகுதியில் 81 நாட்கள் தனிச்சிறையிலும், 14 நாட்கள் மூடிய தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டு கண்காணிப்பாளர் (பொறுப்பு), ஜெயிலர் மற்றும் காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக வேலூர் சிபிசிஐடி ஆய்வாளர் இந்திரா வழக்குப்பதிவு செய்து முதற் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார். இதற்கான விவரங்களை வரும் 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும், வழக்கு தொடர்பாக முதற் கட்ட விசாரணை தொடங்கியுள்ள நிலையில் விரைவில் சிறைத்துறை டிஐஜியின் வீடு, மத்திய சிறையில் சிவக்குமார் அடைக்கப்பட்டதாக கூறப்படும் எச்.எஸ்.4 தொகுதி மற்றும் மூடிய தனிச்சிறைகளை விரைவில் ஆய்வாளர் இந்திரா ஆய்வு செய்வதுடன், தொரப்பாடி பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறைவாசிகள் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரிக்க உள்ளனர். அதேபோல், புகார் தொடர்பாக சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட சிவக்குமாரிடம் நேரில் சென்று விசாரிக்கவும் சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அப்துல் ரஹ்மான் மற்றும் டிஐஜி ராஜலட்சுமி ஆகி யோர் உயர் பதவியில் இருப்பதால் இருவரிடம் விசாரிக்க சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் அல்லது டிஎஸ்பி என யாராவது ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் தனித்தனியாக சம்மன் அனுப்பி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE