ஏடிஎம் மையத்தில் ரூ.34,000-ஐ பறித்த காவல் உதவி ஆய்வாளர் கைது @ சென்னை

By துரை விஜயராஜ்

சென்னை: கீழ்பாக்கம் ஏடிஎம் மையத்தில் பணம் போடுவதற்காக வந்த நபரிடம் ரூ.34 ஆயிரம் பணத்தை பறித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்பாக்கம் ஈ.வி.ஆர் சாலையில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 9-ம் தேதி இரவு, புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சித்திக் (50) என்ற நபர் பணம் போடுவதற்காக வந்துள்ளார்.

அப்போது, சித்திக்கை நோட்டமிட்ட ஒருவர், கையில் வாக்கி டாக்கியுடன் வந்து, தான் போலீஸ் என கூறி அவரிடம் பணத்துக்கான ஆவணத்தை கேட்டுள்ளார். சித்திக்கிடம் ஆவணம் எதுவும் இல்லாததால் பணம் குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி சித்திக்கிடமிருந்து ரூ.34,500 பணத்தை பிடுங்கிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சித்திக் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கீழ்பாக்கம் போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பணத்தை பறித்துச் சென்றது ஐசிஎஃப் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி (55) என்பதும், அவர் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராம மூர்த்தியை கீழ்பாக்கம் போலீஸார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE