சென்னை வந்த கனடா பெண்ணிடம் 10 பவுன் திருட்டு

By KU BUREAU

சென்னை: உறவினர் திருமணத்துக்கு சென்னை வந்த கனடா பெண்ணின் 10 பவுன் நகை திருடுபோனது. இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த எம்ஆர்சி நகரில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்ள கனடா நாட்டிலிருந்து அனுசுயா என்ற பெண் வந்திருந்தார்.

அவர் தனது கைப்பையை தான் அமர்ந்திருந்த இருக்கையில் வைத்துவிட்டு மணமக்களை வாழ்த்த சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது கைப்பை மாயமாகி இருந்தது. அதற்குள் 10 பவுன் தங்க நகை இருந்தது. கைப்பை திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அனுசுயா, தனது உறவினர் ஒருவர் மூலம் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, ஆய்வு செய்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE