சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிங்கம்புணரி இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு உதகை நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (31). இவர் கோத்தகிரியில் உள்ள தனியார் லாட்ஜில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது. இந்நிலையில், தனது லாட்ஜ் அருகே பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமிடம் பழகி வந்துள்ளார். கடந்த 6.10.2020 அன்று சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பர் வீட்டில் தங்க வைத்து, தினந்தோறும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிறுமி காணாமல் போனதை அறிந்த அவரது தாய் கோத்தகிரி போலீஸில் புகார் கொடுத்தார். காணாமல் போன சிறுமியை போலீஸார் தேடுவதை அறிந்த ராஜபாண்டி சிறுமியை மீண்டும் கோத்தகிரிக்கு கொண்டு வந்து விட்டு விட்டு மாயாமாகி உள்ளார்.

சிறுமியை மீட்ட கோத்தகிரி போலீஸார் விசாரணை செய்ததில், திருமண ஆசை வார்த்தை கூறி ராஜபாண்டி பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதை அடுத்து கோத்தகிரி போலீஸார் போக்சோ வழக்கு பதிந்து ராஜபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கம், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ராஜபாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜராகினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE