ராதாபுரம் அருகே 3 வயது குழந்தை கொலை: சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த கொடூரம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: ராதாபுரம் அருகே 3 வயது குழந்தையை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி கிராமத்தில் வசிப்பவர் விக்னேஷ் (36). கட்டிட தொழில் செய்து வந்தார். இவரது மகன் மூன்று வயதான சஞ்சய். இவரது எதிர்வீட்டில் தங்கம் (49) என்பவர் வசித்து வந்தார். சமீபத்தில் விபத்து ஒன்றில் மகன் உயிரிழந்ததால் தங்கம் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் குழந்தை, குட்டியுடன் வசிப்பதை கண்டு ஆத்திரமடைந்த தங்கம் என்ற பெண், எதிர் வீட்டில் வசித்த மூன்று வயதான சஞ்சயை சாக்கு மூட்டையில் கட்டி வைத்ததாகவும், அதில் மூச்சு திணறி சிறுவன் இறந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து தெரியாத விக்னேஷ், தனது மகன் சஞ்சையை காணவில்லை என்று ராதாபுரம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தங்கத்தின் வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த சஞ்சயின் உடலை மீட்டனர். போலீஸார் விசாரணை நடத்தி தங்கத்தை தற்போது கைது செய்துள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் கூறியுள்ளார்.

கொலையான சிறுவனின் பெற்றோரிடம் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தங்கம் என்பவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE