பகீர்... குழந்தைக்கு பால் பாட்டிலில் மது கொடுத்த தாய்!

By காமதேனு

குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக பாட்டிலில் மதுவை ஊற்றி கொடுத்த தாயை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் வசிப்பவர் ஹானஸ்டி டீ லா டோரி. இவர் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. கைவசம் பால், பால் பவுடர் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்த மதுவை பால் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்துள்ளார். குழந்தையும் பசி தாங்க முடியாமல் மது நிறைந்த பாட்டிலை குடித்து அழுகையை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது தாயாரின் செயலில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் குழந்தையை சோதனை செய்தனர். அதில் குழந்தையும் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் தாயிடம் விசாரணை நடத்தி, நடந்த விபரீதத்தை அறிந்து அதிர்ந்தனர்.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தற்போது குழந்தை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE