நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு: துணி காயவைக்கும்போது விபரீதம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி (48 ). பாடபுத்தகம், நோட்டுகள், எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி நீலா(46). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கணவன், மனைவி இருவரும் இன்று காலை அலுவலகம் செல்வதற்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டின் பின்புறம் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மின்கம்பியில் நீலாவின் கைகள் உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் அவர் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது கணவர் ரத்தினமணி உடனடியாக நீலாவை தூக்கியுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நீண்ட நேரமாக பெற்றோரை காணாத அவரது மகள் சென்று பார்த்தபோது தாய் தந்தை இருவரும் உயிர் இழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சத்தம் போட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இருவரது உடல்கள் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE