பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

By KU BUREAU

சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீஸார், இளைஞரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயராஜ் (எ) ராஜன் (25) என்பது தெரியவந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து, தாயுடன் ராஜன் வசித்து வந்துள்ளார்.

ஓட்டேரியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஜெயராஜ் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்ததும், அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் முகேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வெள்ளை அஜித், நிர்மல் உள்ளிட்ட 10 பேர் கும்பல் ஜெயராஜை கொலை செய்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வரும் போலீஸார், தலைமறைவாக உள்ள 10 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE